Tuesday, June 5, 2012

மூன்றாம் புறம் - பகுதி 3



3. நவீன சுயம்வரம்
மறு நாள் வரப் போகும் தன்னுடைய பிறந்த நாளைப் பற்றியே சியாமளாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.  நாளை அவள் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!
சியாமளா யாரையும் காதலிக்கவில்லை.  தன் பெற்றோர் சுட்டிக் காட்டும் பையனைக் கணவனாக ஏற்றுக் கொளள அவள் தயார்!  ஆனால், அவர்களோ ஆளுக்கொரு பையனைச் சுட்டிக் காட்டுகிறார்களே?
பிறந்ததிலிருந்து இன்று வரை சியாமளாவுக்கு எல்லாமே ஏறுமுகம் தான்.  சிவில் எஞ்ஜினீரிங்க் பட்டத்துடன் பெங்களூர் கம்பெனியொன்றில் வேலை பார்த்த அவளது தந்தை மகாலிஙகம், சியாமளா பிறந்தபின் தான் தன்னுடைய நண்பர் மந்திரமூர்த்தியுடன் சேர்ந்து சாமந்தி கன்ஸ்ரக்‌ஷன் கம்பெனியைத் தொடஙகினார்.  சியாமளா அழகோடும் திறமையோடும் வளர வளர, சாமந்தி கம்பெனியும் பெங்களூரில் பேரோடும் புகழோடும் வளர்ந்தது.

காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப, கட்டுமானத் துறையில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, தங்களுடைய வாரிசுகள் சிறப்பு கல்வி பெற மகாலிங்கமும் சுந்தரமூர்த்தியும் அவர்களைத் தயார் செய்திருந்தனர்.

மந்திரமூர்த்தியின் இடத்தில் இப்போதைய பார்ட்னர் அவரது மகன் பாஸ்கர்.  அதைத் தொடர்ந்து, மகாலிங்கத்துக்குப் பதிலாக அவரது மகள் சியாமளா புதிய பார்ட்னர்.  மேலும், நிர்வாகத்தில் மேற்படிப்பு முடித்த மகாலிங்கத்தின் அக்கா மகன் வாசு, கம்பெனியின் புதிய ஜெனரல் மேனேஜர்.

இந்த மூவர் கூட்டணியால், பெங்களூரில் மட்டுமே இயங்கி வந்த சாமந்தி கம்பெனி, வெகு குறுகிய காலத்தில் கர்நாடகாவின் பல இடங்களில் கிளை விட ஆரம்பித்தது.

கம்பெனியின் விரிவாக்க வேலைகளின் நிமித்தம் பாஸ்கர், வாசு சகிதம் சியாமளா கர்நாடகாவின் பல இடங்களுக்குச் செல்ல நேரிடுவதால், சியாமளாவின் அம்மா நித்யா, பெண்ணின் திருமணத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அதற்கு வேறு காரணமும் உண்டு.  சமீப காலமாக, தன்னுடைய கணவன் மகாலிங்கம், பாஸ்கரை ஓஹோ என்று புகழ ஆரம்பித்தது நித்யாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதன் பின்னணியில் ஏதோ உந்துதல் இருப்பதாக அவள் சந்தேகித்தாள்.

கம்பெனியின் நலனுக்கு எதிராக சில முறை நடக்க முயன்ற தன் கூட்டாளி மந்திரமூர்த்தியை தன்னுடைய கணவர் கண்குத்திப் பாம்பாக இருந்து அவ்வப்போது கண்டித்து அடக்கி வைத்தது நித்யாவுக்குத் தெரியும்.

வியாபாரத்தையும் தன்னுடைய குடும்பத்தையும் ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறாகப் பார்த்தவர் மகாலிங்கம்.  உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அவர் உதாரண புருஷர்.  தனது அன்னை இறந்த பின், கணவனை இழ்ந்து மகன் வாசுவுடன் தனியாக வசித்துக் கொண்டிருந்த அக்கா அன்னபூர்ணியைத் தன் குடும்பத்தை வழி நடத்தத் தன்னுடனே இருக்க வைத்தவர் அவர்.  அப்படிப் பட்ட கணவர், இப்போது எப்படி மந்திரமூர்த்தியையும் அவரது மகன் பாஸ்கரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்! அது எதற்காகவாயினும் இருக்கட்டும்...எனது மகள் சியாமளாவின் கழுத்தில் தாலி கட்டும் உரிமை என் நாத்தனார் மகன் வாசுவுக்குத் தான் உண்டு.  அன்னபூரணி நாத்தனாரும் தன் தம்பி மகள் மருமகளாக வருவதையே விரும்புகிறாள்.

போன வாரம் சியாமளாவுக்கும் அவளது பெற்றோருக்கும் அன்னபூரணி இரவு உணவு பறிமாறிய போது, சியாமளாவுக்கும் வாசுவுக்கும் கல்யாணம் உடனடியாக நடக்கவேண்டுமென்று நித்யா ஆரம்பிக்க, பாஸ்கர்தான் மாப்பிள்ளையென்று மகாலிங்கம் அடம் பிடிக்க, தனக்கு யார் துணையாக வரவேண்டுமென்கிற தன் விருப்பத்தை பிறந்த நாளன்று சொல்வதாக சியாமளா அந்தப் பிரச்சினையைத் தள்ளிப் போட்டு ச்மாளித்தாள்.
 
இதோ, விடிந்ததும் தன் பிறந்த நாள்.  மந்திரமூர்த்தியும், பாஸ்கரும் விருந்துக்கு வருவார்கள். வாசுவை சிறு வயதிலிருந்தே அவள் அறிவாள்.  மிக நல்லவன்.  பாஸ்கரைப் பார்ட்னர் என்ற முறையில் தான் பழக்கம்.  வாசுவை கல்யாணத்துக்கு ஓகே செய்தால் அப்பாவுக்குக் கோபம் வரும்.  பாஸ்கரை டிக் செய்தால் அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்!  என்ன செய்யலாம்?

என்னம்மா சியாமளா...யோசனை பலமா இருக்கே!” - நரசிம்மாச்சாரியின் குரல் சியாமளாவைச் சிந்தனையிலிருந்து மீட்டது.

வாங்க மாமா....உக்காருங்க

என்னமோ பெரிய விஷயம் உன் மனசில இருக்கு...நான் கரடி மாதிரி வந்துட்டேனா?”

அதெல்லாமில்லே...ஒரு சின்ன பிரச்சினைதான்...நீங்க என்ன சாப்பிடறீங்க மாமா?”

ஒன்னும் வேண்டாம்மா...மொதல்ல, வாசல்ல யாரு வந்திருக்கா பாரு!

வந்தவனைப் பார்த்ததும் சியாமளாவுக்கு வியப்பு கலந்த ஆனந்தம்..மறக்க முடியுமா இவனை!

சாதனைக் கனவுகளுடன் வியாபாரப் பொறுப்பை ஏற்ற சியாமளாவின் முதல் முயற்சி, கடைசி சில நிமிடங்களில் கை விடப்படும் நிலைக்கு வந்து அவள் மனமொடிந்தபோது, ஆபத்பாந்தவனாக எங்கிருந்தோ வந்த இவன்தான் உதவிக் கரம் நீட்டி, அவளது வெற்றிக்கு வழி வகுத்தான்.

நாற்பது கோடி ரூபாய் அரசாங்க டெண்டர்.  ஐந்து நிமிடங்களே உள்ள நிலையில், பத்திரங்கள் அடங்கிய பெட்டியை சியாமளாவிடமிருந்து எவனோ அபேஸ் செய்து கொண்டு ஓட, சாலையோரம் நின்றிருந்த கோகுலகிருஷ்ணன் அதிரடியாகத் திருடனை ஓடிப் பிடித்து, சியாமளாவிடம் பெட்டியை ஒப்படைத்தான்.  பிரதிபலன் ஏதும் பாராமல் உடன் வெளியேறி மறைந்தான்.

காலத்தே செய்த உதவி ஞாலத்திலும் பெரிதல்லவா?  ஊர் பேர் தெரியாத அந்த உபகாரியைக் கண்டுபிடித்து, பதிலுக்கு ஏதாவது அவனுக்குச் செய்யத் துடித்தாள் சியாமளா.  அவன்தான் இப்போது எதிரே நிற்கிறான்.

தான் உயர்வதற்கு ஒரு கருவியாய் இருந்தவனை இப்போது தன் கண்ணெதிரே கொண்டு நிறுத்திய குடும்ப நண்பர் நரசிம்மாச்சாரிக்கு சியாமளாவின் பார்வை மரியாதை கலந்த நன்றி சொன்னது.

இந்த கோகுலகிருஷ்ணனை தேடிப் பிடிச்சு உன் கிட்டே அழச்சுண்டு வ்ற்றதுக்கு பெரும் பாடு பட்டுட்டேம்மா.  ஆளு என்னமோ அன்னாடம் காய்ச்சிதான்.  ஆனா, காசு தறேன்னா கிட்ட வராதேங்கறான்!  வேலை வாங்கித் தறேன்னா பொழச்சுக்க எனக்குத் தெரியும்கிறான்.  தமிழ்நாட்டிலேந்து கர்நாடகாவில செட்டிலானவர் இவனோட தாத்தா.  அம்மா செத்துட்டா..அப்பன் வேற ஒருத்தியொட ஓடிட்டான்..தாத்தாவும் சமீபத்தில மேல போயிட்டார்

சியாமளா, கோகுலைப் பச்சாபத்துடன் பார்த்தாள் -

கோகுல்...நீ அநாதையில்ல...இனிமே, எஙக குடும்பத்தில நீயும் ஒருத்தன்...இங்கியே இருந்துடு

சந்தோஷப் படுவானென்று பார்த்தால், கோகுல் சிடுசிடுத்தான்!

கேட்டீங்களா சாமி..இதுக்குத் தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன்

சாரி அவனைத் தாஜா பண்ணினார் -

கோவிச்சுக்காத கோகுல் கண்ணா

கோகுலகிருஷ்ணன்...கிருஷ்ணாம்பட்டி கோகுலகிருஷ்ணன்

சரி...சரி...சொந்த ஊரை நீ மறக்கலே....உன் தாத்தாவோட கடைசி ஆசைப் படி கிருஷ்ணாம்பட்டிக்கு நீ போகணும்...பாட்டன் நிலத்தை உழணும்...பரம்பரை வழக்கப்படி, ஊர்ல கூத்து போடணும்...இதானப்பா?”
ஆமாங்க...அதோட இன்னொரு கடமையும் எனக்கு இருக்கு...ஆனா, அது என்னன்னு சொல்லமாட்டேன் சாமி

பயங்கரமான ஆளுப்பா நீ!  மொறைக்கிறே...மறைக்கிறே! உன் பாட்டன் நெலத்தில நீ என்ன வேணா பண்ணிக்க..எதுக்கு உன்னைத் தேடிப் பிடிச்சு இங்க அழ்ச்சுண்டு வந்தேன்னு சொல்லிடறேன்...நீ அன்னைக்கு சியாமளாவுக்கு சரியான சமயத்தில உதவி பண்ணே...பதிலுக்கு சியாமளா உனக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப் படறா..சியாமளா...நீ என்ன பண்றே...கோகுல் தன்னோட சொந்த ஊருக்குப் போக நீ ஏற்பாடு பண்றே...அதோட, ஊர் போக செலவுக்கு, அங்க தங்கறதுக்கெல்லாம் பணம் வேணுமே...அதுக்கு உன் வீட்டுத் தோட்டத்தில கோகுலை வேலை பாக்க வச்சு, இவன் சம்பளத்தை சேத்து வச்சு கிருஷ்ணாம்பட்டிக்கு கோகுலை அனுப்பறே...என்னப்பா..சரியா?”

கோகுல் முகத்தில் மகிழ்ச்சி துளிர் விட்டது -

ரொம்ப சந்தோசம் சாமி...சின்னம்மா, நான் தோட்டத்துக்குப் போயி வேலையை ஆரம்பிச்சிடறேங்க..ஆனா, இப்பவே சொல்லிப்புடறேன்...என்னோட ஊருக்கு சீக்கிரமா அனுப்பிடுங்க

கோகுல் அகன்றதும், சியாமளா நெகிழ்ச்சியுடன் தேங்க்ஸ் மாமாஎன்றாள்.

இப்படி ஒத்தை வார்த்தையில முடிஞ்சு போற விஷயமில்லேம்மா இது! கிருஷ்ணாம்பட்டியில கோகுலை சேக்கறது ரொம்ப முக்கியம்

கிருஷ்ணாம்பட்டின்னா, தமிழ்நாட்டிலதான் இருக்கணும்..எங்க மாமா இருக்கு?”

கேட்டியே...இது கேள்வி!  கோகுலுக்கே தன் பாட்டன் பூமி கிருஷ்ணாம்பட்டி எங்க இருக்குன்னு தெரியாதுங்கறான்! தமிழ்நாடு பூரா சுத்தற எனக்கும் தெரியலே...நக்மா அத்திப்பட்டு கிராமத்தைக் கண்டுபிடிச்சா மாதிரி, நீதாம்மா கிருஷ்ணாம்பட்டியைக் கண்டுபிடிச்சு, கோகுலோட ஆசையைப் பூர்த்தி செய்யணும்

சியாமளா உடனடியாக பாஸ்கரையும், வாசுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.  மூவரும் இணையதளம் போன்ற சாதனங்களை அலசிப் பார்த்தனர்.   கிருஷ்ணாம்பட்டி பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை!

சியாமளாவுக்குச் சட்டென ஒரு யோசனை தோன்றியது.  கோகுலுக்கு உதவி செய்வது மிக மிக முக்கியம்.  அதற்கு பாஸ்கர், வாசு இருவரில் பெரிதும் உறுதுணையாக இருப்பவரே தன்னுடைய கணவனாக வர விருப்பம் என நாளை தன்னுடைய பிறந்த நாளில் அறிவித்தால் என்ன?

தன்னுடைய மணவாழ்க்கைப் பிரச்சினையை கோகுலின் லட்சியத்துடன் முடிச்சுப் போடும் தன் எண்ணத்தை சாரியிடம் சொன்னாள் சியாமளா.

எந்தப் பிரச்சினை காதில் விழுந்தாலும், அதில் தன் மூக்கை நுழைப்பதென்பது சாரிக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி! சினிமாத் துறையில் டைரக்டரிலிருந்து லைட் பாய் வரை, யார் பற்றிய கசமுசா கிளம்பினாலும், தவறு செய்வர்களை எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்கும் கில்லாடி மாமா அவர்!

மறு நாள் சியாமளாவின் பிறந்த நாள் விழாவில் நரசிம்மாச்சாரியும் ஆஜர். அனைவர் முன்னிலையில் அவர் சியாமளாவின் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்.  கோகுலின் ஊர்க் கனவை விவரித்த சாரி, கிருஷ்ணாம்பட்டி பற்றிய விவரங்களைக் கண்டுபிடிப்பதில் சியாமளாவுக்கு பாஸ்கரும், வாசுவும் போட்டி போட்டுக் கொண்டு உதவ வேண்டும்.  அதில் முந்துபவரே சியாமளாவுக்குத் தாலி கட்டத் தகுதியானவர் ...இதுவே சியாமளாவின் விருப்பம் என்று பொட்டில் அடித்தாற் போல் சொன்னனார் சாரி!  

(குறிப்பு: வாசகர்களே...மகரிஷி நாரதர் உஙகள் commentsக்காகக் காத்திருக்கிறார்!)
...தொடரும்

No comments:

Post a Comment