Wednesday, July 23, 2014



வாங்க சினிமா பாக்கலாம்

ஆமாங்க…ப்ளாக்கில நீங்க சினிமா பாக்கலாம்!  எப்படின்னு கேக்கறீங்ளா?

முதல்ல, உங்க மன நிலையை அதற்குத் தயார் பண்ணிக்குங்க… உங்க மனத்திரையிலதான் இந்த சினிமா ஓடப் போகுது.  கீழே குடுத்திருக்க என் கதையோட சுருக்கத்தை மொதல்ல படிச்சு கதையோட போக்கைப் புரிஞ்சுக்குங்க……அதுல வர்ற பாத்திரங்களுக்கு ஏத்த மாதிரி உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ, ஹீரோயின், அம்மா, அப்பா, காமெடி ஸ்டார் தயார் பண்ணிக்குங்க.. அப்புறமா கதைக்கு ஏத்த மாதிரி சிரிக்கிறது, கோபப் படறது, உங்க ரசனைக்கு ஏத்த காதல் பாடல்களை மனத் திரையில ஓட விடற காரியங்ளை முழுக் கதை வசனங்களை படிக்கிறப்ப செய்யுங்க!  இப்ப சொல்லுங்க, சினிமா பாக்கிற திருப்தி உங்களுக்கு கிடைக்கும்தானே! மொதல்ல, கதையை சுருக்கமா படியுங்க…….

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலுக்கு இரண்டாம் இடம்.
(by T.S.Varadan (நித்யா) )
காதலர் தினத்தில் ஆரம்பித்து மறு வருட காதலர் தினத்தில் முடியும் அட்டகாச, ஜாலியான ஆரம்பத்துடன் கூடிய, ஒட்டு மொத்த இளைஞர் போராட்டங்களைச் சந்திக்கும் முடிவு வரை மர்மம் விலகாத காதல் கதை (பதிவு). குறைந்த செலவில் 7 – 8 பாத்திரஙளை வைத்து எடுக்கக் கூடிய சினிமா கதை..

*இளம் வயது கதாநாயகன் அனந்து ஒரு பிரபல கம்பெனியின் தலைமை விற்பனை அதிகாரி.  இளம் வயது கதாநாயகி சாவித்திரி அதன் போட்டி கம்பெனியின் தலைமை விற்பனை அதிகாரி.

*சாவித்திரியின் அம்மா தனது உறவினன் தினேஷுக்கு சாவித்திரியை மணமுடிக்க முடிவெடுக்கிறாள்.  அதைத் தவிர்க்க நினைக்கும் சாவித்திரியின் அப்பா, அனந்துவைத் தன் மகளுடன் வாழ்வில் இணைக்க முயற்சிகள் எடுக்கிறார்!

*அனந்துவும் சாவித்திரியும் எல்லா விதத்திலும் மனதளவில் ஒத்துப் போனாலும், போட்டி கம்பெனிகளில் வேலை செய்வதால், அவர்கள் ஒன்று சேர முடியாமல் பிரச்சினை எழுகிறது.

*அதிர்ஷ்டவசமாக,போட்டி கம்பெனிகள் இரண்டும் ஒன்றாக இணைந்து ஒரே கம்பெனியாக மாற, அனந்துவும் சாவித்திரியும் தடை விலகியதால் மனமொத்த காதலர்களாக மாறுகிறார்கள்!  இளவட்டங்களின் விழாக்கள், டீவீ நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் ஜோடியாக வந்து, கல்லூரி மாணவர் மாணவிகளிடையே அவர்கள் பிரபலம் அடைகிறார்கள்.

*எல்லா தடைகளும் நீங்கி, பெற்றோர்கள் அவர்களின் திருமணத்துக்கு நாள் குறித்து, பத்தே   நாட்களில் அவர்கள் தம்பதியாகும் நிலையில், வேலை விஷயமாக வெளியே சென்ற அனந்து, இரவு வீடு திரும்பவில்லை. மறு நாள் வந்தவன், அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை!

*தங்களிடையே எந்த வித ஒளிவு மறைவும் இருக்காது என காதலர் நிகழ்ச்சிகளில் முழங்கிய அதே அனந்து, எவ்வளவு தரம் கேட்டாலும் அன்றிரவு நடந்ததைச் சொல்லாதது சாவித்திரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

*மறு நாளில், செய்தித்தாள்கள் மற்றும் சேனல்களில் அனந்துவின் அலுவலக காரியதரிசியாக இருந்த மஞ்சுளா கொலை பற்றியும், அவ் விஷயத்தில் அனந்து மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின!  அதனால், சாவித்திரியும் அவள் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைகின்றனர்.

*தன் மீது கொலை பற்றிய சந்தேகம் ஊரெல்லாம் இருந்தும், அன்றிரவு நடந்ததை அனந்து வெளியிடாமல் மவுனம் சாதிக்கிறான்.  தான் அவனைக் கை விடப்போவதாகவும், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் சாவித்திரி மிரட்டியும் அவனிடமிருந்து பதில் இல்லை.  வேறு வழியின்றி, அனந்து-சாவித்திரி திருமணம் நின்றதாக அறிவிக்கப் பட்டு, அதே தேதியில் உறவினன் தினேஷுடன் திருமணம் நடக்க கனத்த இதயத்துடன் சாவித்திரி சம்மதிக்கிறாள்.

*வரப் போகும் காதலர் தினத்தன்று அனந்து-சாவித்திரி ஜோடியை வைத்து சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்த இளம் பெண்கள் அணித் தலைவி மற்றும் கல்லூரி ஆண்களும் பெண்களும் அனந்து செய்த காதல் துரோகத்தைக் கண்டித்து பல போராட்டங்களை நடத்தினர்.

*திருமணத்தன்று நடந்தது என்ன?
*கொலை நடந்த அன்று நடந்த நிகழ்ச்சிகளை அனந்து ஏன் மறைத்தான்?
* அனந்து-சாவித்திரி காதல் ஜெயித்ததா தோற்றதா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன படிச்சீங்களா?  உஙக மனசில சினிமா பாக்க தயாரா இருங்க….. முழு கதை வசனத்தை கூடிய சீக்கிரம் எதிர்பாருங்க! .   ,  

No comments:

Post a Comment